ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

இலக்கிய பெண்ணுக்கு எழுத்துகளால்
தாலி கட்டினேன்.
உணர்வுகளால் சேலை கட்டினேன்.
வார்த்தை குங்குமத்தை தொட்டு - பேனாவால்
பொட்டு வைத்தேன்.
சிந்தனை கட்டிலிலே நினைவுகளை
தாலாட்டி உறங்க வைத்தேன்.
வெள்ளை தாள் மெத்தையிலே - மொழிக்கு
முத்தம் கொடுத்தேன்.
மறை நிலை உத்திகளை உவமைகளால்
கட்டிப்பிடித்தேன்.
எதுகை மோனைகளால் அழகிய
போர்வை விரித்தேன்.
ரகசிய வரிகளால் இரவை வரைந்தேன்.
அந்தரங்க சொற்களுக்கு அடிக்கோடிட்டேன்.
கருவறையில் கற்பனையை - மகவுவாய்
சுமக்க விட்டடேன்.
பிரசவ காலத்தில் தந்தை தகுதி பெற்றேன்.
எல்லா குழந்தைகளையும் கவிதை என்றே
கணக்கு வைத்தேன்.
வாசகர் முன்பள்ளிக்கு நாள் தோறும்
அனுப்பி வைத்தேன் - ஆனால்
இப்போதும் என் மனைவி
கர்பமாகவே இருக்கிறாள்.
நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக