வியாழன், 15 ஜூன், 2017




தமிழர்களை பின்தொடரும் அவலம்
-------------------------------------------------------------------------------

ஏனையின் வீதியை திறந்து விட்டீர்கள் - யாழ்
தேவி ரெயிலையும் ஓட விட்டு தான் பார்க்கிறீர்கள்.

தமிழர்களுக்கான போக்குவரத்து சேவை அபிவிருத்தி 
முற்றாக நிறைவுற்று விட்டதாகவும் தகவல் பரப்புகிறீர்கள்.

நாளாந்தம் நாம் சிந்தும் கண்ணீர் துளியினை - ஏனோ
கண்டு கொள்ளாமலே இருக்கிறீர்கள்.

யாரோ வைத்த கண்ணிக்குள் எம் இனம் அகப்பட்டு
கொண்டிருப்பது போலிவேதான் இருக்கிறது.

பெரும் துயரிருந்து இப்போதுதான் ஓரளவு ஓய்ந்து
காணாமல் போனவர்களை தேடிக் கொண்டும் - கூட
இருப்பாவர்களை தேத்திக் கொண்டும் இருக்கின்றோம்.

தற்சமயம் நடு வீதிகளில் நம்மவர்களின்
எலும்பையும் தோலையும் சதையையும்
கூட்டி அள்ள வேண்டி இருக்கிறது.

எல்லா இணையத்தளங்களிலும் எம் முண்டங்களே 
முக்கிய செய்தியாகவும் பகிரப்படுகிறது.

போரில் தொலைந்த கணவன் எப்போவாவது
வீடு வருவான் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் 
சகோதரிகள் மத்தியிலே - லொறியில் மோதிய புருசன்
இனி வரமாட்டான் என்று தாலியை அறுக்கும்
நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

யாரோ வைத்த பொறியிலே நாம் சிக்கி 
தவிப்பது போலவேதான் இருக்கிறது

நாட்டின் ஏனைய பகுதியிலோ விதியிலோ 
பிரச்சனை இல்லையே என்று நாம் புலம்பவில்லை...
தமிழர் தெருவில் மட்டுமே ஏன் இந்த அவலம்
தொடர்ந் கொண்டிருக்கிறது என வருந்துகிறோம்.

கடவைகள் சரியில்லையா அல்லது சாரதிகள் 
சரியில்லையா என்ற வாக்குவாதத்திற்கு வரவில்லை
ஐநூறை ஆயிரத்தை வாங்காமல் கடமையை 
சரியாக செய்யலாமே என்று சொல்லுகின்றோம்.

வேக கட்டுப்ட்டை இழந்து இரு சில்லு வாகனத்தோடு
பிடி பட்டவர்களிடம் பணத்தை வாங்கி விட்டு தயவு
செய்து நாலு சக்கர வாகனத்துக்கு தடக் கொள கொடுக்க 
வேண்டாம் என வேண்டுகின்றோம்

தந்தையை தாயை இழந்து வாழும் குழந்தைகளை 
பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. - மேலும்
சுமைகளை எம்மிலே சுமக்க விடாதீர்கள்.

இருந்தாலும் யாரோ விரித்த வலைக்கு நாம்
இரையாக்கப்படுவது போலவேதான் இருக்கிறது.

மரணம் எல்லோருக்கும் நிச்சயம் தான்
என்றாலும் நடு வீதியில் உயிரை விட
எமக்கு எந்த அவசரமுமில்லை...

வீதி ஒழுங்கை யார் மீறுகிறார்களோ 
அவர்களை சிறைப்பிடியுங்கள்.

தண்டப் பணம் அறவிடாமல் 
தகுந்த தண்டனை கொடுங்கள்

முடிந்த அளவு ரயில் வரும் போது
கடவைகளில் தடை போடுங்கள்.

பணத்துக்காக ஓட்டுனர் பத்திரம் வழங்குபவர்களே
இனியாவது ஒதுங்கி கொள்ளுங்கள்.

குடிகார சாரதிகளே கொஞ்சம்
எங்களை வாழ விடுங்கள்.

வயது வர முதலே சகோதரங்களுக்கு வாகனம்
வாங்கிக் கொடுக்கும் வெளிநாட்டவர்களே 
ஓரளவு புரிந்து கொள்ளுங்கள்.

ஆனாலும் எம் இனத்துக்கு யாரோ ஏவி 
விட்டது போலவேயே இருக்கிறது.

நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டி 
இருக்கிறது - ஆனால் இந்த சின்ன பிரயாணங்களில்
உயிரை விட்டு எம் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.


நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக