செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஆனையிறவு - வவுனியா ஊடான வீதி - 01.02.2011


பஸ்சில் போனாலும் - எனக்கு
கப்பலில் போவது போலவே இருந்தது.
அலைகள் இருக்கவில்லை - ஆனால்
ஆட்டம் இருந்தது.

குன்றும் குழியுமான அந்த வீதிகளில்
மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு
ஒன்று சேர்ந்து குளக்கரையை...
நோக்கி சலசலக்கிறது.

லொறிகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே புரண்டு
கவிண்டு கிடந்தன.

இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த
விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து
புது வர்ணம் பூசப்பட்டிருந்தது.

இடையிடையே "நன்றி மீண்டும் வருக "
என்பது மட்டும் மகுட வாக்கியமாக...
பொறிக்கப்பட்டிருந்தது.

குலுக்கிற குலுக்கலில்
குடல் வெளியே வந்து..
விடும் போல் இருந்தது.


சாளரம் ஊடாக சிலர்
கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள்.
பலர் இருக்க முடியாமல்
துள்ளித்துள்ளி எழுந்து நின்றார்கள்.

ஒன்று மட்டும் பரவாயில்லை... வீதிகள்
குன்றும் குழியுமாக இருப்பதால்
ஓட்டுனருக்கு தூக்கம் வர வாய்ப்பில்லை....

- நெடுந்தீவு - முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக