ஞாயிறு, 23 ஜூன், 2013


மழை பெய்துகொண்டிருந்தது.

சேரிப் புறத்திலே கூரை சரிந்த
பாழ் அடைந்த வீட்டில் வசிக்கும்
உன்னை பார்க்க வருகின்றேன்.
"ஒற்றை குடையோடு"

என்னை தூரத்தில் பார்த்ததும்
ஓடி வருகிறாய்.

மெதுவாய் உன்னை கதுவி என்னில்
சாய்த்துக் கொண்டு - உனது
உறவுக்காரர்களை விசாரித்தேன்.

நீ பேசவே இல்லை மௌனத்திலும்
முனகலோடு என்னை இறுக பிடிக்கிறாய் .
"மழையை ரசித்தபடி"

உன் மேனி குளிரில் நடுங்க
என் நடை தள்ளாடியது.
குடை ஈடாடியது - இருந்தும்
உனது உறவுக்காரர்களை பற்றியே
விசாரித்தேன்.

குடை வழியாக ஒழுகும் மழை நீருடன்
கை நீட்டி விளையாடுகிறாய்.
எந்த சலனமும்மில்லாமலே...

பேசாமலே நானும் நடந்தேன்

எனது மாளிகை நெருங்க - திரும்பவும்
உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.

"திடுக்கிட்டு அம்மா என அலறினாய்"

மழை முற்றாகவே நின்ற பிறகும்
குடைக்குள் தூறியது... அது
அந்த ஆறு வயது சிறுமியின்
விழிகளில் இருந்து....

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக