ஞாயிறு, 23 ஜூன், 2013

கதவு யன்னல் எல்லாம் அடித்து சாத்துகிறேன்
கட்டிலில் குப்பற படுத்து...
பேப்பரும் கூடவே பேனாவும் எடுக்கிறேன்.

உன்னை பார்க்கையில் நீ முறைத்தது
நான் பேசியும் நீ பேசாதது
எல்லாவற்றையும் சொற்களாக்கி
உனக்காக - உன்னை போலவே
அழகான காதல் கடிதத்தை
நிறைவு செய்கின்றேன்.

காகிதம் தலையனைக்கு கீழேயும்...
நான் தலையனைக்கு மேலேயும் ...
கண்களை மூடுகிறேன்- நீ
எனக்கு மேலேயும் வருகிறாய்.

காது மாட்டி கை வளையல் நகப்பூச்சு
எல்லாம் நீ கட்டி வந்த சேலையின்
நிறத்தோடு ஒத்திருந்தது.
நீயும் எனக்கு ஒத்தாசையாக இருந்தாய்

உன்னை நெருங்கவும் - நீ
என்னை நெருக்கவும்
இரவு சரியாகவே இருந்தது.

காலையில் காகிதத்திலே தான்
சில மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது
காரணம் - கனவின்
உன் வருகை பற்றியும்...
தொடுகை பற்றியும்...
காகிதத்தில் நான் கட்டாயம்
குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இன்றைய இரவிலாவது உனக்கான
ஓர் முழுமையான காதல் கடிதத்தை
வரைய முயற்சிக்கின்றேன்

தயவு செய்து எனது
கனவுப்பக்கம்
இன்று வராதே...

"காதல் புனிதமானது"

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக