வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்
அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை
விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில் மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து
இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை
கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக